உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே 85 வயது மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2023-02-27 08:25 GMT   |   Update On 2023-02-27 08:25 GMT
  • தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
  • தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த என்.ஜி.ஓ. நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திரு மணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

தனலட்சுமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது மகன் ஒருவர் தனலட்சுமியை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை தனலட்சுமி தனது வீட்டின் அருகில் வசிப்பவர்களை அழைத்தார். சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது தனலட்சுமி மாயமாகி இருந்தார்.

அவர் வீட்டில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். கிணற்றின் அருகில் நாற்காலியும் கிடந்தது.

கிணற்றின் பக்கவாட்டு சுவர் உயரம் என்பதால் தனலட்சுமி நாற்காலி மீது ஏறி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சம்பத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறுகட்டி தனலட்சுமியின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தனிமையில் வசித்ததால் மனவேதனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News