திருவள்ளூர் அருகே மீண்டும் பணி வழங்க கோரி தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 66 பேர் கைது
- கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
- கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் மூன்று முறை சப்- கலெக்டர் மகாபாரதி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு தொழிலாளர்கள் 178 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரையும் பணியில் அமர்த்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தொழிற்சாலை அருகே அம்மன் கோவில் வாசல் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் மூன்று முறை சப்- கலெக்டர் மகாபாரதி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 51 ஆண்கள் 15 பெண்கள் உள்பட 66 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் திருப்பாச்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.