உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவர்களை படத்தில் காணலாம்.


பண்ருட்டி அருகே நிச்சயதார்த்த விழாவில் உணவு சாப்பிட்ட 59 பேருக்கு வாந்தி- மயக்கம்

Published On 2022-06-28 05:09 GMT   |   Update On 2022-06-28 05:09 GMT
  • நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
  • இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மகள் கமலாவதி(வயது28). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்த விழா பேரங்கியூரில் நடைபெற்றது. இதில் மேலிருப்பு,பேரங்கியூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு உணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்டு விட்டு உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர். நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News