தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வந்த 3 பேர் கைது
- தனிப்படை போலீசார் குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் குளத்தூர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் குளத்தூர் முத்துக்குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு மூட்டைகளுடன் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முத்துக்குமாரபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள்(52), குளத்தூர் பெரியார் நகரை சேர்ந்த மாரியப்பன்(38) மற்றும் வெள்ளாரம் பகுதியை சேர்ந்த செல்வம் (65) என்பதும், அவர்கள் முத்துக் குமாரபுரம் பகுதியில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார், மாரியப்பன், பெருமாள் மற்றும் செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1.86 லட்சம் மதிப்புள்ள 254 கிலோ புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.