உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் விசாரணை நடத்தினார்.

திண்டிவனம் அருகே உதவி தலைமை ஆசிரியை-மகளிடம் 20 பவுன் நகை கொள்ளை

Published On 2022-12-21 04:43 GMT   |   Update On 2022-12-21 04:43 GMT
  • வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியோ ராஜேஷ். அவரது மனைவி சித்ரகுமாரி (வயது48).

இவர் பாதிராப்புளியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர்.

பின்னர் வீட்டின் பின்பக்கமாக உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் சித்ரகுமாரி அணிந்திருந்த 15 பவுன் நகை, அவரது மகள் கிருத்திகா(22) அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். உடேன அந்த கும்பல் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியது. அதனை தொடர்ந்து அந்த கும்பல் பீரோவில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு சித்ரகுமாரி தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வர வைக்கப்பட்டது. அது பல இடங்களில் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை . மேலும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், சிராஜுதீன் மற்றும் போலீசார் கைரேகை சேகரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ .எஸ். பி. அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் கத்தி முனையில் 20 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News