உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே விவசாயி வீட்டில் 12 பவுன் நகை, பணம் கொள்ளை

Published On 2023-08-16 09:04 GMT   |   Update On 2023-08-16 09:04 GMT
  • வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
  • அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அன்டராயநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வருபவர்கள் அரிதாஸ் (வயது 52), தண்டபாணி (47). அண்ணன், தம்பியான இவர்கள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அவரவர் குடும்பத்துடன் தனித்தனி அறையில் நேற்று இரவு படுத்து தூங்கினர். இன்று காலை கண் விழித்து எழுந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்கள் உள்ளதா என்று அண்ணன், தம்பி இருவரும் பார்த்தனர்.

அப்போது வீட்டிலிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதனுள் இருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு 12 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அண்ணன், தம்பி இருவரும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், புனிதவதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விவசாயம் செய்து வரும் அண்ணன், தம்பி வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News