உள்ளூர் செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர்- கடந்த ஆண்டைவிட குறைவு

Published On 2023-02-17 13:20 IST   |   Update On 2023-02-17 13:20:00 IST
  • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 831 மி.கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3182 மி.கனஅடியும் தண்ணீர் இருக்கிறது.
  • கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி (11.7டி.எம்.சி) தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தற்போது ஏரிகளில் 10 ஆயிரத்து 159 மி.கனஅடி (10.1 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 300 மி.கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும் வழங்க வேண்டும்.

ஏற்னவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அதன்படி கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு குறைவு என்றாலும் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் கண்டலேறு அணையிலும் அதிகமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2571 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 3072 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

இதேபோல் சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 831 மி.கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3182 மி.கனஅடியும் தண்ணீர் இருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News