உள்ளூர் செய்திகள்

ஆற்காடு அருகே பஸ் மரத்தில் மோதி 10 பக்தர்கள் காயம்

Published On 2022-12-29 11:19 IST   |   Update On 2022-12-29 11:19:00 IST
  • ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் அருகே பஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
  • ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

திருப்பத்தூர் மாவட்டம் சாவடி குப்பத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் 52 பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக மேல்மருவத்தூருக்கு நேற்று தனியார் பஸ் மூலம் சென்றனர்.

மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திருப்பத்தூருக்கு செல்வதற்காக ஆற்காடு வழியாக வந்து கொண்டிருந்தனர்.

ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் அருகே பஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆற்காடு-செய்யாறு நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரம் உள்ள பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் பக்தர்கள் 52 பேரும் வேறொரு பஸ் மூலம் திருப்பத்தூருக்கு சென்றனர். விபத்து குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News