உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவியை காதலிக்கும் தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து

Published On 2023-03-07 06:04 GMT   |   Update On 2023-03-07 06:04 GMT
  • ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
  • நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.

வேலூர்:

வேலூர் காகிதப்பட்டறை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 23) மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

அதே மாணவியை தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்ற வாலிபரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரஞ்சித்குமார், நிர்மல் குமார் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று நிர்மல் குமார் வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு ரஞ்சித் குமார் வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே மாணவியை காதலிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிர்மல் குமார் அவரது நண்பர்களான ரெட் என்கிற ராம்குமார், அருண்குமார், பிரவீன் குமார் ஆகியோரை அழைத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.

இதில் ரஞ்சித் குமாருக்கு மார்பு மற்றும் வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ஏழுமலைக்கு தலை மற்றும் கைகளில் கத்தியால் வெட்டினர்.

படுகாயம் அடைந்த இருவரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News