உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூரில் சப்ளையருக்கு கத்திக்குத்து

Published On 2023-07-04 07:51 GMT   |   Update On 2023-07-04 07:51 GMT
  • பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • தொண்டாமுத்தூர் போலீசார் 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

வடவள்ளி,

கோவை தொண்டாமுத்தூர்-புத்தூர் ரோட்டில் மதுபானபார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 பேர் கும்பல் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது. அங்கு அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஊழியர் பழனியப்பன் என்பவர் சப்ளையராக இருந்தார்.

இந்த நிலையில் அந்த கும்பல் இரவு 10 மணியான பிறகும் அங்கிருந்து புறப்படவில்லை. எனவே பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த கும்பல் ஒப்புக்கொள்ளவில்லை. பழனியப்பனிடம் மேலும் மதுபாட்டில் கேட்டு தகராறு செய்தது. இதற்கு அவர் மறுத்து விட்டார்.

எனவே ஆத்திரம் அடைந்த கும்பல் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியது. இதில் பழனியப்பனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எனவே சக ஊழியர்கள் திரண்டுவந்து நியாயம் கேட்டனர்.

இதற்கிடையே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தேவராயபுரத்தை சேர்ந்த சிலருக்கு போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மேலும் 7 பேர் கும்பல், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தது. அப்போது அவர்கள் மதுபானகூடத்தில் இருந்த டேபிள், சேரை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து பழனியப்பனை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு உள்ளன. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் என்பவர் தலைமையில் புத்தூர் மதுபான பாருக்கு வந்த கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தேவராயபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 11 பேர் சிக்கினர். அப்போது அவர்களிடம் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்பிறகு தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக் (வயது 29), புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் வீரசேகரன் (29), நரசிபுரம் பிரகாஷ் (27), தேவராயபுரம் மகாவிஷ்ணு என்ற சபரி (19), ஹரிஹரன் (19), பாரதி கண்ணன் (22), அருணகிரி (19), வாஞ்சிநாதன் (21), சந்தோஷ்குமார் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து புத்தூர் மதுபான பாரை சூறையாடி, சப்ளையர் பழனியப்பனின் மண்டையை உடைத்ததாக தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கண்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.நொய்யல் கார்த்திக்கிற்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதற்கு பார்ட்டி கொடுப்பதற்காக அவர், நண்பர்களுடன் மதுபான பாருக்கு வந்து உள்ளார்.அப்போது தான் மேற்கண்ட சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News