மாணவர்கள் இலக்கை நோக்கி நிர்ணயம் செய்து வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
- தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி 18-வது ஆண்டு விழா போல் பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- தேர்வில் 6 லட்சம் பேர் கலந்து கொண்டால் அதில் 180 பேர் மட்டுமே தேர்ச்சியடைகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி 18-வது ஆண்டு விழா போல் பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சப்- கலெக்டர் தாக்ரே சுபம் நியான்டாரோ தலைமை தாங்கி மாணவ -மாணவி களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸிந்தா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் இது போன்ற விழா நடைபெறவில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஓருவகையில் தனித்திறமை உண்டு அதை அடைவதற்கும் இலக்கை நோக்கி நிர்ணயம் செய்து வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்றவற்றில் தேசிய அளவில் நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு படிக்க வேண்டும். அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் 6லட்சம் பேர் கலந்து கொண்டால் அதில் 180 பேர் தேர்ச்சியடைகிறார்கள். பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அறிவுரைகளை கேட்டு நல்ல முறையில் படித்து தங்களது திறமையின் மூலம் இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். பிள்ளைகளை தரம் பிரித்து பெற்றோர்கள் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினார். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிவுத்திறன் வளர்க்கும் வகையில் பேச்சு போட்டிகளும் நடைபெற்றன.
விழாவில் சுதன்கீலர், சுதாசுதன், மகிழ்ஜான், கீர்த்தனா மகிழ், ராக்கேஷ், ஜீனா ஜீவன், உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.