உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

நிலக்கோட்டையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திய மாணவிகள்

Published On 2023-09-02 11:21 IST   |   Update On 2023-09-02 11:21:00 IST
  • ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கள் தோழியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
  • மாணவர்களை போலவே இவர்களும் பீர் பாட்டில்கள் வாங்கி வைத்து அதனை ஷாம்பைன் போல குலுக்கி ஒருவர்மீது ஒருவர் ஊற்றி கொண்டாடினர்.

நிலக்கோட்டை:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் இன்னும் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகள் அருகே இயங்கும் கடைகளால் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு மதுபானம் விற்ககூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவதில்லை.

இதனால் பல கடைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பதை காணமுடிகிறது. பார்கள் மூடப்பட்டு விட்டாலும் அவர்கள் ஒன்றாக கூடி அருகில் உள்ள இடங்களில் மதுகுடிப்பதும், பின்னர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

மாணவிகள் கொண்டாட்டம்

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தங்கள் தோழியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். மாணவர்களை போலவே இவர்களும் பீர் பாட்டில்கள் வாங்கி வைத்து அதனை ஷாம்பைன் போல குலுக்கி ஒருவர்மீது ஒருவர் ஊற்றி கொண்டாடினர்.

பின்னர் மதுபானத்தை குடித்து கேக்வெட்டி கொண்டாடி ஆட்டம் போட்டனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வரவே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. இதனிடையே சஸ்பெண்டு செய்யப்பட்ட ஒரு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

நிலக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்குருவெங்கட்ராஜ் மாணவிகளின் எதிர்காலம் கருதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கினார்.

மது பழக்கத்தால் மாணவர்கள் சீரழிந்து வந்த நிலையில் தற்போது மாணவிகளும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் குழு இப்பிரச்சினையில் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News