உள்ளூர் செய்திகள்

ஆரணி அரசுப் பள்ளியில் மோதல்: மாணவன் பலி

Published On 2023-03-30 16:46 GMT   |   Update On 2023-03-30 16:46 GMT
  • இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
  • மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.

பெரியபாளையம்:-

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.

இப்பள்ளியில், சுமார் 916 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 9வது வகுப்பு இ3 பிரிவில் படிக்கும் மதுரைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது14) என்ற மாணவனும், ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச் செல்வன்(வயது14) என்ற மாணவனும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், தமிழ்ச்செல்வன் மயங்கி கீழே விழுந்தான்.

இதனைக் கண்ட அருகில் இருந்த மாணவர்கள் கூக்குரல் இட்டனர். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் அந்த மாணவனை மீட்டு ஆரணி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவ இடத்துக்கு ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News