- அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன
- பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100 நாட்களுக்கு பின் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மருத்துவ கல்லூரி தலைமை அரசு மருத்துவமனையில், 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு மீண்டும் அமைக்கப்பட்டது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்றுப்பரவலை சமாளிக்கும் வகையிலும், பாதித்தோருக்கு உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மீண்டும் உடுமலை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு 30 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வரை கண்டறியப்பட்டு வருவது ஆரம்பகட்ட தொற்று நிலை தான். பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர், உடுமலை, பல்லடத்தில் கொரோனா தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.