உள்ளூர் செய்திகள்

வளர்பிறை பஞ்சமியையொட்டி கெரகோடஅள்ளி ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

வராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-10-20 15:14 IST   |   Update On 2023-10-20 15:14:00 IST
  • தருமபுரி வராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராஹி அம்மன் கோவில்களிலும் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டவராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ அஷ்டவராஹி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இந்த வழி பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

மகாகாளி வராஹி அம்மன்

தருமபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோன்று தருமபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள16 அடி உயரமுள்ள மகாகாளி வராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News