ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி சென்னை சாலை பெரிய மாரியம்மன், முத்து மாரியம்மன், பழையபேட்டை அங்காளம்மன், சமயபுரத்து மாரியம்மன், ராயக்கோட்டை சாலை பெரிய மாரியம்மன், துளுக்காணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- கோவில்களில் காலை நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கிருஷ்ணகிரி,
ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பூஜைகளும், வழிபாடும் நடை பெறுகின்றன. இந்த ஆண்டு ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று 4-வது மற்றும் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, எலுமிச்சைப் பழத்தோரணங்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமய புரத்து மாரியம்மன் கோவிலில் வஸ்திர அலங்கா ரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாகாத்தம்மன் அலங்காரத்திலும், அக்ரஹாரம் அம்பாபவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீ யோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.