உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழா: 101 கிடாய்கள் பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்

Published On 2023-03-07 14:09 IST   |   Update On 2023-03-07 14:09:00 IST
  • அக்னி வீரபத்திர சுவாமி கோவிலில் திருவிழா நடந்தது.
  • 101 கிடாய்கள் பலியிட்டு விடிய, விடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்புவனம்

திருப்புவனம் கோட்டையில் அக்னி வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சார்பில் மகா வனபோஜனம், பச்சைக்குடில் உற்சவ விழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

அதன்படி 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த மாதம் 21-ந் தேதி கோவிலில் கொடி கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 24-ந்தேதி முதல் வைகை ஆற்றங்கரையிலிருந்து தினமும் கரகம் எடுத்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர் சுற்றி வந்து பச்சை குடிலில் இறக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 101 கிடாய்கள் பலியிடப்பட்டு முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்பு மகா வனபோஜனம் என்னும் அன்னதானம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில் தேரோடும் வீதி, பெருமாள் கோவில் வீதி, சிவன் கோவில் வீதி உள்பட பல வீதிகளில் பக்தர்கள் இருபுறமும் அமர்ந்து அன்னதான விருந்தை சாப்பிட்டனர்.

நள்ளிரவில் தொடங்கிய அன்னதானம் அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News