உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பதனீரை சோதனை செய்த அலுவலர்கள்

Published On 2023-05-30 07:08 GMT   |   Update On 2023-05-30 07:08 GMT
  • காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
  • பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

காரைக்குடி

காரைக்குடியில் கடந்த மாதம் முதல் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிகாலை பதநீர் இறக்கப்பட்டு வேன் மூலமாக காரைக்குடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

உடலிற்கு நலம் பயக்கும் பதநீரை மக்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர்.அதே வேளையில் இந்த பதநீரில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவ தாகவும் இனிப்பு சுவைக்காக சீனி மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துக்குமார், சாக்கோட்டை பிளாக் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பதநீர் விற்பனையை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களிலும் சோதனைக்காக மாதிரி களை எடுத்துச் சென்றனர்.

மேலும் பதநீர் விற்பனையாளர்களிடம் பதநீர் இறக்கவும் விற்பனை செய்யவும் முறையான அனுமதி பெறவேண்டும் எனவும், அதிகாலை இறக்கப்படும் பதநீரை பகல் ஒரு மணிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

காரைக்குடி 100 அடி சாலையில் விற்பனை செய்து வந்த பதநீரில் இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து விற்பனை செய்வதை அறிந்து சுமார் 50 லிட்டர் அளவிலான பதநீரை சாக்கடையில் கொட்டிச் சென்றனர்.

இதுகுறித்து அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில், பதநீரில் ரசாயன பொருட்களை கலந்தால் அதனை அருந்துவோருக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் உணவு முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News