உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் தரிசு நில மேம்பாட்டு திட்ட செயலாக்க கையேடுகளை உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அறிவுறுத்தல்

Published On 2023-05-27 07:42 GMT   |   Update On 2023-05-27 07:42 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
  • சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.

வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றம், ஆழ்குழாய் கிணறு, வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு விடுத்தனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்கள் களஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற விவசா யிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைக்கவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News