உள்ளூர் செய்திகள்

இலுப்பக்குடி கிராம சபை கூட்டம்

Published On 2022-11-02 13:38 IST   |   Update On 2022-11-02 13:38:00 IST
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராம சபை கூட்டம் நடந்தது.
  • கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் முன்னிலை வகித்தனர். பொன்நகர், திருமலை நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு, நியாய விலைக் கடை அமைக்கக்கோரி தலைவரிடம் மனு கொடுத்தனர்.வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி, வேளாண்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

இலுப்பக்குடி அரசு பள்ளி தலைமையாசிரியர் பேசுகையில், பள்ளிக்கு கணிப்பொறி வாங்கித்தந்த யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் தலைவர் வைரமுத்து அன்பரசன் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துதர கோரிக்கை விடுத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தலைவர் வைரமுத்து அன்பரசன் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.வடகிழக்கு பருவமழை வர இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்காமல் இருக்கவும், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும் தேவையானவற்றை செய்து வருகிறோம் என்றார்.

சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News