உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளில் தொடர் கொள்ளை

Published On 2023-10-28 14:29 IST   |   Update On 2023-10-28 14:29:00 IST
  • பீரோவில் வைத்திருந்த ரூ.32,000 ரொக்கம், நகைகள் மாயம்
  • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை.

கோவை நீலிகோணம் பாளையம், தாமோதரசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ராமநாதன்(வயது58). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.32,000 ரொக்க பணமும், தங்க செயின், மோதிரம், கம்மல், மற்றும் 40 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது.இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதே போல் அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (31). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு சென்றார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ.50000 ரொக்க பணமும், 3 பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

இந்த 2 சம்பவங்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே தெருவில் அடுத்தடுத்து வீடுகளை பூட்டை உடைத்து திருட்டு நடந்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News