உள்ளூர் செய்திகள்

காந்திபுரத்தில் போலி முத்திரை பயன்படுத்தி பிரபல செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை

Published On 2022-12-30 10:13 GMT   |   Update On 2022-12-30 10:13 GMT
  • கடை உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது.

கோவை,

செல்போனில் பல ரகங்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், போன் கவர் போன்றவற்றுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து வருகிறது.

இதனை வாங்குதற்கு கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது. இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சிலர் போலியான ஆப்பிள் முத்திரையை பயன்படுத்தி செல்போன் உதிரிபாகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல் சென்னை சூளைமேட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி குமரவேல் என்பவருக்கு தெரியவந்தது. அவர் இது குறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி முத்திரையை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவன செல்போன் உதிரிபாகங்களை சில கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர்கள் மதுரை காமராஜ புரத்தை சேர்ந்த முகமத் அப்சர்கனி (வயது 24), ராஜஸ்தானை சேர்ந்த வர்தம் சவுத்ரி (23), மகேந்திரசிங் (28), கேரளா பாலக்காட்டை சேர்ந்த நவுசாத் (39), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கடைகளில் இருந்து போலி முத்திரையுடன் கூடிய 1000 செல்போன் கவர்கள், 25 இயர்போன், 25 யூ.எஸ்.பி கேபில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News