நாங்குநேரி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
- தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது.
- நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வானுமாமலை வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை அரிவாளால் வெட்டினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் வானுமாமலை (வயது 62). விவசாயி. கடந்த 27-ந் தேதி இவரது குடும்ப கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக வானுமாமலையின் தம்பி ராமையா மகன் சுடலை, சின்னத்துரை மகன் செல்வம் ஆகியோர் பூசாரியை அழைப்பதற்காக அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் என்ற கபாலி கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றனர்.
அப்போது தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வானுமா மலைக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வானுமாமலை நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை தாக்கி, அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்ணனை தேடி வருகின்றனர்.