உள்ளூர் செய்திகள்

பகல் காப்பகத்தில் சிறுவர்கள் விளையாடிய காட்சி.

சிறை பணியாளர் குழந்தைகளுக்கு காப்பகம்- மருத்துவமனை திறப்பு

Published On 2023-10-08 14:40 IST   |   Update On 2023-10-08 14:40:00 IST
  • புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்பகம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை
  • போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம்

சேலம்

சேலம் மத்திய ஜெயிலில் 300-க்கும் மேற்பட்ட சிறை பணியாளர்கள் உள்ளனர். இவர்களின் வசதிக்காகவும் அவர்களுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் மேம்பாட்டிற்காகவும் சிறை துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி மையமும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்பகம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவமனை மற்றும் அரசு போட்டி தேர்வு மையம் ஆகியவை சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பகல் காப்பகம் மற்றும் சிறப்பு கல்வி நிலையங்களை பார்வையிட்டார். 

பின்னர் இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் கூறியதாவது:-

சிறைத்துறை சார்பில் தற்போது சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பகல் காப்பகம், மருத்துவமனை, போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம் என ெதாடங்கப்பட்டுள்ளது. கணவன்- மனைவி பணிக்கு சென்ற நிலையில் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் காப்பகமும், சிறைப் பணியாளர்கள் குழந்தைகள் 9-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகள் நல்ல முறையில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இலவச சிறப்பு டியூஷன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் படித்து பயன் பெறலாம். மேலும் சிறை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர் கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள், சிறை ஊழியர்கள், வார்டன்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News