உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

ரூ.48 லட்சம் மோசடி: வங்கி ஊழியர்களை கண்டித்து சுயஉதவிக்குழுவினர் முற்றுகை

Published On 2022-06-28 10:15 GMT   |   Update On 2022-06-28 10:15 GMT
  • பரமத்தி வேலூரில் ரூ.48 லட்சம் மோசடி, வங்கி ஊழியர்களை கண்டித்து சுயஉதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
  • இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளனர். கடனை மாதந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுவினர் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் வங்கி மூலமாக சுய உதவிக் குழுவினரிடம் பணம் வசூல் செய்வதற்காக தற்காலிக வணிக தொடர்பாளராக சரண்யா, ஹோமா ஆகிய இரு பெண்கள் நியமிக்கப்பட்டு சுய உதவிக் குழுவினரிடம் மாதமாதம் பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருவரும் 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்ததை அறிந்த மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வங்கி மேலாளர் அழகரசனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அழகரசன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக கூறி காலதாழ்த்தி வந்துள்ளார். வங்கி கிளை மேலாளர் அழகரசன் பணிமாறுதல் சென்றதை அறிந்த பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவை பெண்கள் இந்தியன் வங்கி முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல் ஆய்வாளர் வீரம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் வங்கியில் உள்ள உதவி மேலாளர் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.

மனுவில், மோசடி செய்த சரண்யா, ஹோமா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் வங்கி மேலாளர் அழகரசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

புகார் மனுவை பெற்ற சுப்பிரமணியம் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி விசாரணை நடத்த கூறியதையடுத்து பெண்கள் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் வங்கி முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News