உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு

Published On 2022-12-23 15:08 IST   |   Update On 2022-12-23 15:08:00 IST
  • கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
  • மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கிருஷ்ணகிரி,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கலுராம் (வயது 32). இவர் தற்போது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் தங்கி கெலமங்கலம் சாலையில் மின்சார பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

கீழே கடையும், மேலே வீடும் உள்ளது. நேற்று ஒரே மாதிரி உடை அணிந்த 2 மர்ம நபர்கள் மாடியில் இருந்த கலுராம் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது வீட்டில் கலுராம், அவரது மனைவி யசோதா மற்றும் 2 குழந்தைகளும் இருந்துள்ளனர்.

அந்த மர்ம ஆசாமிகளை கண்டதும் கலுராமும் , அவரது மனைவியும் சத்தம் போட்டுள்ளனர்.உடனே அந்த ஆசாமிகள் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர் கத்தி முனையிலேயே வீட்டின் பீரோவிலிருந்த பணத்தை எடுத்து கொடுக்கும்படி மிரட்டினர். இதில் பயந்துபோன கலுராம் பீரோவில் இருந்த ரூ.4.5 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்து அந்த மர்ம ஆசாமிகளிடம் கொடுத்தார்.

இதையடுத்து மர்ம ஆசாமிகள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசில் கலுராம் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

கலுராம் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்கள் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். கத்தி முனையில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News