கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
- வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
- வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்படும் கரும்புகளை கோபாலபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து அரவைக்கு அனுப்பு கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல மழை பெய்ததால், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நடுப்பட்டி, ஆவாலம்பட்டி, தாசரஹள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில், கரும்பு பயிர்களில் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. கரும்பு சோகை மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போன்று மாறிவிடுகிறது.
புழுக்கள் கரும்பின் ஆதார வேர்களை தாக்கி உண்பதால் குருத்து பகுதி முழுவதும் காய்ந்துவிடுவதால் வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால், மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.