கோப்பு படம்
திண்டுக்கல் அருகே நகை, பணத்துடன் பொருட்களையும் அள்ளிச்சென்ற கொள்ளையர்
- கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.
- போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனி போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராம்கமலா(41) என்ற மனைவியும், விக்ரமன்(20) என்ற மகனும் உள்ளனர்.
சதீஸ்குமார் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம். ராம்கமலா சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இடைவிடாது பெய்த மழையினால் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ராம்கமலா பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.
சுயஉதவிக்குழு பெண்களிடம் வசூல் செய்த பணத்தை தான் கட்டுவதற்காக வைத்திருந்ததாகவும், அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டதாகவும் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி, தலைமையிலான போலிசார் வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.