உள்ளூர் செய்திகள்

ஆணைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை கலெக்டர் கார்மேகம் திறந்து வைத்து மலர் தூவினார்.

ஆணைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-03-11 15:29 IST   |   Update On 2023-03-11 15:29:00 IST
  • 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.
  • இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீர்மட்டம் 52.55 அடியாக உயர்ந்து, 141.81 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், 2 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, பிப்ரவரி 23-ந் தேதி காலை முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம் ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் வினாடிக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தண்ணீரை திறந்து வைத்தார். இவ்விழாவில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் குறிச்சி பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அத்தனூர்பட்டி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் புழுதிக்குட்டை அறிவழகன், குறிச்சி கலா பெரியசாமி மற்றும் தி.மு.க பிரமுகர்கள் குறிச்சி சடையன், கனகராஜ், பேளூர் நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News