கோவில்பட்டி புற்று கோவிலில் ரத சப்தமி சிறப்பு பூஜை
- புற்றுக்கோவிலில் ரத சப்தமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ரத சப்தமி சிறப்புப் பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாதம் உத்தராயன புண்ய காலத்தில் வளர்பிறை சப்தமி திதியில் சூர்ய பகவான் ரதம் வடக்கு நோக்கி திரும்பும் நாள். இந்நாளில் அனைத்து சிவ, வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது ஐதீகம். இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார திபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யார் செய்யதுவைத்தார். விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.