ராணிபேட்டை டோல்கேட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு
- அமைச்சர் காந்தி தலைமையில் ஏற்பாடு.
- நாளை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ராணிப்பேட்டை:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்திடவும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்திடவும், பல்வேறு நலத்திடங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நேற்று இரவு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமையில் வாலாஜா டோல்கேட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் காந்தி பூங்கொத்து கொடுத்து புத்தகம் வழங்கி வரவேற்றார்.
பின்னர் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைதொடர்ந்து தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சிமன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், திமுக பிரதிநிதிகள், நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளை (விழாயக்கிழமை) காலை 9.30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் காலை 11மணியளவில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி சீரமைக்கும் பணியை பார்வையிடுகிறார். இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார்.