- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே உள்ள முடிதிருத்தும் கடைக்கு சென்ற மாரிமுத்து, அங்கு நேற்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என்ற நபருக்கும், மாரி முத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதையடுத்து முடி திருத்தும் கடையில் இருந்த கத்தியை கொண்டு மைக்கேல், மாரிமுத்து கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மாரிமுத்து கீழே விழுந்தார். உடனே, அவர் மீட்கப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.