திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை
- போலீசார் கடும் எச்சரிக்கை
- ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதோடு அதனை குறைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி திருமணம் நடத்த மண்டபதிற்கு வரும் பெற்றோர்களிடம் மணப்பெண்ணிற்கு 18-வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.
மேலும் மண்டப உரிமையாளர்களாகிய நீங்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நீங்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.