உள்ளூர் செய்திகள்

கணவனை கொலை செய்துவிட்டு மனைவி நாடகமாடியது அம்பலம்

Published On 2022-09-28 15:21 IST   |   Update On 2022-09-28 15:21:00 IST
  • போலீசாரிடம் கணவர் அடித்து துன்புறுத்துவதாக புகார் ெசய்தார்
  • வேறு யாருக்காவது தொடர்பா? விசாரணை

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன் (வயது 38) ரேடியோ சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஷோபனா (30) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. ஷோபனா கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். தக்கோலம் போலீசார் ஷோபனாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஷோபனா போலீசாரிடம் கூறியதாவது;-

எனது கணவர் சீராளனுக்கு நாடகத்தில் நடிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அடிக்கடி நாடகம் தொடர்பாக வெளியூருக்கு சென்று விடுவார். அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி தெரியவந்ததால் நான் அவரை கண்டித்தேன்.

ஆனால் அவர் கள்ள தொடர்பு கைவிடவில்லை. அடிக்கடி மது குடித்துவிட்டு இரவில் கொடுமைப்படுத்துவார். நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு கள்ளக்காதல் தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார்.ஆத்திரமடைந்த நான் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் உளுந்தையில் உள்ள எனது தாய் வீட்டிற்குச் சென்றேன்.

கொலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மப்பேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என புகார் அளித்தேன்.

இது குறித்து அவர்கள் தக்கோலம் போலீசிருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நேரத்தில் கொலை நடந்ததை அறிந்த தக்கோலம் போலீசார் என்னை அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கொலையில் ஷோபனாவிற்கு வேறு யாராவது உடந்தையாக இருந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News