18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் நடத்த கூடாது
- விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் அறிவுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தகரக்குப்பம் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அப்போது அங்கிருந்த பெண்களிடம் கலெக்டர் உரையாடினார். அனைவரும் விவசாயிகள் தானே என கேட்டதற்கு ஆமாம் என தெரிவித்தனர்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமான பெண் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.18வயது நிரம்பாத பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது குற்றமாகும். பெண் பிள்ளைகள் மனதளவில் குடும்பத்தை நடத்த தயாராக இல்லாத நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்து குடும்பம் நடத்திட செய்வது அவர்களின் மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பழைய காலத்தில் இருந்தது வேறு இன்றைய நவீன காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை உங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்பதை உணர்ந்து அவர்களை கல்லூரி படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும்.
இதை அனைவரும் மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்.பெண்கள் நினைத்தால் அனைத்தையும் தடுக்கலாம்.தயவு கூர்ந்து இதை ஒவ்வொவரும் உணர்ந்து செயல்பட வேண்டுமென கலெக்டர் வளர்மதி கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது இணை இயக்குனர் வேளாண்மை வடமலை, துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், லதா மகேஷ், உதவி இயக்குனர்கள் பெருமாள், சண்முகம், பாலாஜி, வேளாண் அலுவலர்கள் சுரேஷ் குமார், நித்யா, வேளாண் உதவி பொறியாளர்கள் ரூபன் குமார், ரவிக்குமார், உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.