குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
- ஆலோசனைகள் வழங்கப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஒன்றியம் கிளாம்பாடி ஊராட்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் சுதா பாலாஜி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜெயலலிதா, கவிதா, மீனா, பரிமளா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வித்யாலட்சுமி வரவேற்றார்.
சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை திருமணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ சட்டம், காவலன் செயலி, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் சக்தி லீலா, மகளிர் குழு தலைவி மகேஸ்வரி, இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.