கழிவுநீர் கடலில் கலப்பதை படத்தில் காணலாம்.
கழிவுநீர் கலப்பதால் கடல் வளம் பாதிக்கும் அபாயம்
- கீழக்கரையில் கழிவுநீர் கலப்பதால் கடல் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
- உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இருந்து தினந்தோறும் 15 லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட கழிவுநீர் நேரடியாக கடலில் கலந்து வருகிறது.
பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. அதோடு தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது.
ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல்நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருகிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-
கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.
கீழக்கரை நகரில் ஆண்டு கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், கட்டிடக் கழிவுகள் கொட்டும் பகுதியாக கடற்கரை மாறி வருகிறது.
இதற்கு நிரந்த தீர்வு காண கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து விவசாயத்திற்கோ அல்லது மின்சாரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்த வேண்டும்.இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.