உள்ளூர் செய்திகள்

 தேவிபட்டினம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்

Published On 2022-12-14 13:48 IST   |   Update On 2022-12-14 13:48:00 IST
  • தேவிபட்டினத்தில் ரூ.1.47 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சிகிச்சை பிரிவிற்கான கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு சிகிச்சை வழங்கும் பகுதிக்குச் சென்று சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தவுடன் சிகிச்சை பெற வந்த மக்களிடம் காலதாமதமின்றி சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

மரைக்காயர் ஊரணியில் ரூ 15.72 லட்சம் மதிப்பீட்டில கரை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளும் பொழுது இந்த ஊரணிக்கு வரக்கூடிய மழைநீருக்கான வரத்து கால்வாய்களையும் சீரமைத்து ஊரணியில் தண்ணீர் முழுமையாக தேங்கி நிற்கும் வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தேவிபட்டினம், காந்தி நகர் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ2.77 லட்சம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வருவதை பார்வையிட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட பயனாளிக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து தேவிபட்டினம் ஊராட்சியில் ரூ11.27 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ8.83 லட்சம் மதிப்பீட்டில் கிணறு, காமராஜர் தெருவில் ரூ9.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினையும் பார்வையிட்டு பணியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தார்.

படையாச்சி காலனியில் ரூ5.23 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதையும், மேலப்பள்ளிவாசல் பகுதியில் ரூ13.09 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படு வதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

சோலைநகர் பகுதியில் ரூ6.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை, பூவாடை பகுதியில் ரூ24.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மனித சக்தியின் மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாத புரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் அர்ஜுனன், ரவி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜன்னத்து யாஸ்மின், தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News