வேலைவாய்ப்பு முகாமில் 182 மாணவர்கள் தேர்வு
- கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 182 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாக ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூத் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி மின்னியல் துறைத்தலைவர் மேஜர் நாகராஜன் வாழ்த்தி பேசினார். முன்னாள் வேலைவாய்ப்பு அதிகாரி மரியதாஸ் வரவேற்றார்.
வேலைவாய்ப்பு முகாமில் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம், காளையார்கோவில் செயின்ட் மைக்கேல், ராமநாதபுரம் செய்யது அம்மாள், கீழக்கரை முகமது சதக் ஆகிய பொறியியல் கல்லூரி மாணவர்களும், பரமக்குடி முத்தாலம்மன், வேம்பார் தேவநேசன், காளையார்கோவில் செயின்ட் மைக்கேல், ராமேசுவரம் உதயம், கீழக்கரை முகமது சதக் ஆகிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் துணை மேலாளர் சங்கர் தங்களது நிறுவனத்தை அறிமுகப்படுத்தி நேர்முகத் தேர்வை நடத்தினார். ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரிவு மேலாளர் வேல்மணி மற்றும் உதவி பொது மேலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் நேர்முக தேர்வுகளை நடத்தினர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாணவர் களுக்கு பணிநியமன ஆணை களை வழங்கினர். இதில் 182 மாணவர்கள் ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் கல்லூரி வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூத் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.