ரம்ஜான் பண்டிகை: நாகூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
- பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர்.
நாகப்பட்டினம்:
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறை தென்பட்டதை யொட்டி, இன்று (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள தர்காக்கள், பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பின், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர். தொழுகையில் பங்கேற்ற சிறுவர்களும் கைக்குழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது.
இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.