உள்ளூர் செய்திகள்

வீடு எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

Published On 2022-08-15 06:47 GMT   |   Update On 2022-08-15 06:47 GMT
  • வீடு எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் நாசமானது
  • மின்கசிவு காரணமாக நடந்தது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலபுரம் கிராமத்தில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது.

மணமேல்குடி தாலுகா கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது62), இவரது மனைவி பேச்சி இவர்களுக்கு மகன் மாரிமுத்து, மகள்கள் கல்பனா, சித்திரா ஆகியோர் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமான நிலையில், ஒரே வீட்டில் குறுக்கே சுவர் வைத்து மகன் ஒரு பகுதியிலும், காளிமுத்து குடும்பம் ஒரு பகுதியிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.

விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர்கள் அருகே உள்ள வயல்காட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதே போன்று லாரி ஓட்டுனரான மகன் மாரிமுத்து வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஜெகதாப்பட்டினம் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே தீ மளமளவென பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. தீ விபத்தில் 11 சவரன் நகை, 70 ஆயிரம் ரொக்கப்பணம், தொலைக்காட்சிப்பெட்டி, சலவை எந்திரம் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து நாகுடி காவல்த்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News