உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை

Published On 2023-06-01 07:19 GMT   |   Update On 2023-06-01 07:19 GMT
  • பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்
  • கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2,720 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 80 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 12 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 2 ஹெக்டேர், தென்னை 12,584 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும்,0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு,இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆகஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்) சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News