மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடிய கணவர் கைது
- கடுக்காக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் குழந்தை பர்னாந்து ( வயது 38).
- கடந்த ஜூன் 25-ந்தேதி ஆரோக்கியமேரி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் குழந்தை பர்னாந்து ( வயது 38). இவரது மனைவி ஆரோக்கியமேரி (31). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த குழந்தை பர்னாந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 25-ந்தேதி ஆரோக்கியமேரி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து வடகாடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் அப்போது விசாரித்து வந்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின்படி, ஆரோக்கிய மேரியின் கழுத்தை நெரித்து குழந்தை பர்னாந்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, மனைவியை கொலை செய்ததாக குழந்தை பர்னாந்தை வடகாடு போலீசார் நேற்று கைது செய்தனர்.மேலும் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.