உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

Published On 2023-11-07 07:34 GMT   |   Update On 2023-11-07 07:34 GMT
  • ஆலங்குடி அருகே மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்
  • உறவினர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் இடையன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(25) பொட்டாத்திக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(30) மேலும் இரண்டு நபர்கள் என மின்வாரிய கேங்க்மேன்கள் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர்-கச்சிரான்பட்டி சாலையில் மின்வாரியப் பணியில் தனித்தனி மின்கம்பங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் அஜித் மற்றும் முருகேசன் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்து கீழே விழுந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசார் அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்கள் மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து உயிரிழப்பிற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை- பேராவூரணி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், அது வரை போராட்டத்தை கைவிட்டு அமைதியாக இருக்குமாறும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News