ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் கலெக்டர் கலந்தாலோசனை
- ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் கலெக்டர் கலந்தாலோசனை நடைபெற்றது
- அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு நடந்தது
புதுக்கோட்டை:
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், காணொலிக்காட்சி வாயிலாக அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து இல்லங்களிலும் 13, 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடப்படவுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அனைத்து இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கொடியேற்றுவதற்காக அனைத்து இல்லங்களுக்கும் கொடிகள் சென்று சேரும் வகையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் மூலமாக கொடியேற்றப்படுவதை, சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 15-ந் தேதி அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் அதிக அளவிலான பொதுமக்கள் பங்கேற்கவும், கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.