- அறந்தாங்கி வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் ஆடிமாத புரவி எடுப்பு விழா
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் தாலுகா வெளுவூர் சவுந்தரநாயகபுரம் கிராமத்தில் உள்ள குன்னமுடைய அய்யனார், காளியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 23ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா தொடங்கியது முதல் குன்னமுடைய அய்யனார், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை மற்றும் காவடி எடுப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக குதிரை மற்றும் காளை எடுப்பு விழா நடைபெற்றது. சுள்ளணி கிராமத்திலிருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள் மற்றும் மதலை சிலைகளை 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் தங்கள் தோள்களிலும், தலையிலும் சுமந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். மழை வளம் வேண்டியும், உலக மக்கள் நலன் வேண்டியும் நடைபெற்ற விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.