அறந்தாங்கி அருகே சிறைக்கு சென்று வந்தவர் மன உளைச்சலில் திடீர் தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல்
- அறந்தாங்கி அருகே சிறைக்கு சென்று வந்தவர் மன உளைச்சலில் தற்கொலை செய்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதில் பழனிச்சாமி மீது பி.சி.ஆர். வழக்கும், ரவிக்குமார் மீது அடிதடி வழக்கும் போடப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். வழக்கு போடப்பட்ட பழனிச்சாமி அறந்தாங்கி காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 10 தினங்களாக சிறையிலிருந்தார். அவர் நேற்று ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில் சிறைக்கு சென்று வந்த அவமானம் தாங்காமல் மன உளைச்சலுக்கு ஆளான பழனிச்சாமி நேற்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பழனிச்சாமியின் சாவிற்கு காரணமாவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகம் முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.