கண்டமனூரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
- கண்டமனூர் கிராமத்தில் தெரு நாய் ஒன்று வெறிபிடித்து குழந்தைகள் உட்பட 19 பேரை கடித்தது.
- தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கண்டமனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. பகல் நேரங்களில் நாய்கள் தேனி-வருசநாடு சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
மேலும் நாய்கள் அடிக்கடி சாலையை கடப்பதால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டமனூர் கிராமத்தில் தெரு நாய் ஒன்று வெறிபிடித்து குழந்தைகள் உட்பட 19 பேரை கடித்தது. இதே போல கடந்த ஆண்டும் வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
கண்டமனூர் கிராமத்தில் நாய்களுக்கு வெறி பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.