உள்ளூர் செய்திகள்

தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2025-02-08 13:55 IST   |   Update On 2025-02-08 13:55:00 IST
  • பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
  • தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 213 பேருக்கு தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.

ஆனால் அதிகாரிகள் பட்டா வழங்கிய இடத்தில் உள்ள காலி வீட்டுமனைகளை அளந்து காட்டாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயனாளிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பட்டா வழங்கிய இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறாத மனைகளின் பட்டாவை ரத்து செய்து நிலமற்ற வேறு நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதை கண்டித்தும், உடனடியாக இடத்தை அளவீடு செய்ய வலியுறுத்தியும் பயனாளிகள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மதன், வக்கீல் வேல்முருகன் ஆகியோரின் தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News