உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்.

பச்சிளம் குழந்தை இறந்தது தொடர்பாக ஓசூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்

Published On 2022-12-27 16:09 IST   |   Update On 2022-12-27 16:09:00 IST
  • அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
  • குழந்தையின் பெற்றோர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

ஓசூர்,

ஓசூர் அருகே பேகேபள்ளியைசேர்ந்த கணேசன் என்பவரது மனைவி சத்தியா என்பவர் கடந்த 23-ந் தேதி பிரசவத்திற்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அடுத்த நாள் (24-ந்தேதி) சத்தியாவிற்கு பிரசவ வலி ஏற்ப்பட்டது.அந்த நேரத்தில், டாக்டர்கள் இல்லாமல் போனதால் நர்சுகள் மற்றும் துப்புரவு பணியாளர்களே பிரசவம் பார்த்ததால், ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மருத்துவமனை வளாகத்தில் அ.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.கவை சேர்ந்த மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், நகரமைப்பு குழு தலைவர் அசோகா, வெங்கடசாமி மற்றும் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அங்கு நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தி, குழந்தை இறந்தது தொடர்பாக புகார் தொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர், குழந்தையின் பெற்றோர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

Tags:    

Similar News